திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.14 தசபுராணம்
பண் - காந்தார பஞ்சமம்
பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட
    இமையோர் இரிந்து பயமாய்
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு
    சுடுவா னெழுந்த விசைபோய்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை
    அருளாய் பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
    அவனண்டர் அண்ட ரரசே.
1
நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட
    நிலநின்று தம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை
    யிருபாலு நின்று பணியப்
பிரமனு மாலுமேலை முடியோடு பாதம்
    அறியாமை நின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி
    யவனா நமக்கோர் சரணே.
2
காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக
    உருவாகி மூவர் உருவில்
சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்
    உருவாகி நின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு
    குறளாயோ ராலின் னிலைமேல்
பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி
    யவனா நமக்கோர் சரணே.
3
நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ
    டுலகேழு மெங்கு நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
    துதியோதி நின்ற தொழலும்
ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து
    ஒழியாத கோபம் மொழிய
ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்
    அவையா நமக்கோர் சரணே.
4
நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்
    நிதனஞ்செய் தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்
    அரணம் புகத்தன் அருளால்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்
    அனல்பாய நீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள
    லவனா நமக்கோர் சரணே.
5
நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற
    னெரிகேசன் நேடி வருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்
    அளவின்கண் வந்து குறுகிப்
பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த
    உயிர்வவ்வு பாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்
    தொழுதோது சூடு கழலே.
6
உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்
    அவியுண்ண வந்த இமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற
    படிகண்டு நின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி
    கமியென் றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை
    கழல்கண்டு கொள்கை சரணே.
7
நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி
    நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட
    இருளோட நெற்றி யொருகண்
அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு
    மடவாள் இறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்
    அவனா நமக்கோர் சரணே.
8
கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு
    கணையோன் அணைந்து புகலும்
மழைவடி வண்ணன்எண்ணி மனவோனை விட்ட
    மலரான் தொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்
    எரியென் றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த
    தழல்வண்ணன் எந்தை சரணே.
9
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக
    நிறைவென்று தன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை
    பெருமான் உகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன்
    இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த
    அவனா நமக்கோர் சரணே.
10
கடுகிய தேர்செலாது கயிலாய மீது
    கருதேலுன் வீர மொழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்
    மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்
    வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
    நினைவுற்ற தென்றன் மனனே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com